'ஈழத் தமிழரின் எதிர்காலம் இனி எப்படி அமையும்?' என்ற சிந்தனையுடன் அமெரிக் காவின் அட்லாண்டா நகரிலிருந்து லூப்தன்சா விமானத்தில் சென்னையை நோக்கிப் பயணித்த என் கைகளில் வில்லியம் ஷைரர்
எழுதிய காந்தியைப் பற்றிய புத்தகம் விரிந்து கிடந்தது. 'வீரம் செறிந்த பயணத்தில் துன்பம் விளைவது, மூக்கு துவாரங்களில் சுவாசம் நிகழ்வது போல்... மிகவும் இயல்பானது. ஆனால், எந்தத் துன்பத்துக்கும் ஓர் எல்லை உண்டு. துன்பத்தின் எல்லையில் நிற்கும்போதும் விழிப்படையாமல், மேலும் அதே பாதையில் பயணத்தைத் தொடர் வது விவேகமற்றது!' என்ற காந்தி யின் விளக்கத்தில் பார்வை படர்ந்தது; யோசனையில் மனம் ஆழ்ந்தது.
வார்த்தைகளில் விளக்க முடியாத சோகங்களைச் சுமந்தபடி வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைந்து கிடக்கும் ஈழத் தமிழர்கள் இன்னுமோர்
ஆயுதப் போரில் ஈடுபட இயலுமா? ஆயுதமேந்தி அளவற்ற தியாக உணர்வுடன் விடுதலைப்புலிகள் நடத்திய வீரப்போரினால், எந்த உரிமையைப் புதிதாகப் பெற முடிந்தது? போதும் இந்தப் போரென்றால், சிங்களருக்குச் சமமாக வாழ்வது எப்படி சாத்தியம்? காந்தியப் பாதையில் அவர்கள் முதலில் போராடியபோதும், அணுவளவு நன்மையையும் அடைய முடியவில்லையே! அப்படி யானால், எம்தமிழர் ஈழநிலத்தில் உரிமையோடு வாழ எதுதான் உகந்த வழி? காந்தியத்தையே மீண்டும் கைக்கொள்ளலாமா?
முன்பு அமெரிக்காவில் வி.பி.சிங் தமிழரிடையே பேசியபோது, 'ஈழத் தமிழரின் இன்னல் தீர ஒரே வழிதான் உண்டு. தமிழகம் பொங்கி எழுந்தால், இந்திய அரசு வேகம் கொள்ளும். முடிவில் இலங்கை 'இணங்கி வரும்' என்றார். நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் பொங்கினார்கள். ஜெயலலிதாவும் தேர்தல் ஆதாயத்துக்காகப் பொங்குவது போல் நடித்தார்.
ஆனால், பெரும்பான்மைத் தமிழினம் மட்டும் இன்றுவரை பொங்கவே இல்லை. அது இலவச தொலைக்காட்சியில் இனவுணர்வை இழந்து, 'மானுக்கும் மயிலுக்கும்' மதிமயங்கி நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற 69 லட்சத்து 53 ஆயிரம் வாக்குகள்கூட தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளே தவிர, ஈழ ஆதரவு வாக்குகள் இல்லை. ஈழத்துக்கான ஆதரவு அலை உண்மையில் தமிழகத்தில் வீசியிருந்தால், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவைக்கு இன்று ஜெயலலிதாவே தலைமை தாங்கியிருப்பார். இனவுணர்வுடன் வாக்குகள் விழுந்திருந்தால் வாக்குகள் பிரிந்திருக்காது; காங்கிரசுக்கு வெற்றி வந்திருக்காது. வி.பி.சிங் சொன்னாரே... அதுபோல் தமிழகத்தை எப்படித்தான் பொங்கச் செய்வது?
தமிழகத்தைப் பொங்கச் செய்வதென்றால், சட்டம்-ஒழுங்கைக் கெடுப்பதன்று; தனித் தமிழகம் கேட்பதன்று; ஆயுத கலாசாரத்தைஆதரிப்பதும் அன்று. காந்திய வழியில் ஒவ்வொரு தமிழரையும் தீமைகளுக்கு எதிராகத் திருப்புவது! இனவுணர்வு கொள்ளுமாறு தூண்டுவது! இந்திய அரசை ஈழத் தமிழரின் உரிமை காக்க, விரைந்து செயற்படுமாறு நிர்ப்பந்திப்பது! கட்சி அரசியலை ஈழத் தமிழர் நலன் காக்கவாவது கைவிடுவது! நெடுமாறனும் வைகோவும் ஒரு திசையிலும், கலைஞரும் திருமாவளவனும் மறுதிசையிலும் கொடி பிடித்து கோஷமிட்டுப் பேரணி நடத்துவதால், ஒரு பயனும் ஈழத் தமிழருக்கு எந்நாளும் ஏற்படப் போவதில்லை. உலகத்தின் எந்தப் பகுதியிலும் ஒரு தமிழன் பாதிக்கப்பட்டால், இங்குள்ள தமிழர் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு இனியாவது வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
'இனப் பிரச்னையில் கலைஞரா... ஜெயலலிதாவா?' என்ற மலிவான லாவணிக் கச்சேரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'ஈழத்தில் கெரில்லா போர் தொடரும், புலிகள் மீண்டும் பொங்கி எழுவார்கள்' என்று இங்கே சுகமாக மேடை போட்டு வாய்வீரம் பேசுவதை முதலில் விடவேண்டும். 'மாணிக் பண்ணை' முகாமில் மரணத்தின் வாசலில் உயிர்வதையுடன் பிச்சைப் பாத்திரம் சுமப்பவர்கள், இவர்களில் ஒருவரும் இல்லை. களத்தில் நின்று சாவை சந்திப்பது வேறு; கண்ணீர் விடுவதும், கவிதை எழுதுவதும், போர்ப் பரணி பாடுவதும் வேறு. தமிழகத்தில் உள்ள தலைவர்கள் முத்துக்குமார்கள் இல்லை. வெறும் வாய் வேதாந்திகள்.
காந்தியின் பாஷை, ராஜபக்ஷேக்களுக்குப் புரியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பிரபாகரனின் பாஷை சிங்களப் பேரினவாத அரசுக்குப் புரிந்துவிட்டது என்பதும். அமெரிக்காவில் அரங்கேறிய பின்லேடனின் பயங்கரவாதம், இலங்கை அரசுக்கு வரமாக வந்து சேர்ந்தது. இனவொடுக்கலுக்கு எதிரான எழுச்சியை உலகம் பயங்கரவாதமாகவே பார்க்கத் தொடங்கியதுதான் இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு.
இந்த மனப்போக்கின் மாற்றத்தைக் கணிக்கத் தவறியதுதான் பிரபாகரனின் பிழை. சிங்கள ராணுவத்தைவிட வலிமையான ராணுவக் கட்டுமானத்தை உருவாக்கிவிட்டால், தமிழீழம் அமைத்துவிடலாம் என்பது பிரபாகரனின் எண்ணம். ஆனால், சிங்களருக்குப் பின்னால் சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் படை நிறுத்தும்; சர்வதேச சமுதாயம் புலிகளின் அழிவைக் கைகட்டியபடி வேடிக்கை பார்க்கும் என்ற எதிர்வினையை அவர் கருத்தில் கொள்ளவில்லை.
அங்கேதான் இலங்கை அரசின் வெறிச் செயலுக்கான வெற்றியும், வீரம் விளைவித்த விடுதலைப்புலிகளின் தோல்வியும் ஒரே மையப் புள்ளியில் இணைந்தன. எந்தக் காரணத்துக்காக ஒருவன் கையில் துப்பாக்கியைத் தூக்கினாலும், உலகம் அவனை இனிமேல் பயங்கரவாதியாகவே பார்க்கும். அவனுடைய நியாயங்கள் குறித்து, அது கவலைப்படாது. காலத்துக்கு ஏற்றாற்போல் புரட்சியாளர்கள் யுத்த தந்திரங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.
போர்முறையான காந்தியம் கோழைகளின் ஆயுதமன்று. 'பீரங்கிக்குப் பின்னால் நின்று சுடுவது வீரமா? அதற்கு முன்னால் நெஞ்சு நிமிர்த்திச் சாவை சந்திப்பது வீரமா?' என்று கேட்டவர் காந்தி. 'வெள்ளையரும் நாங்களும் ஒன்றில்லை. எங்கள் இனம், பண்பாடு, சமயம் ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் வெள்ளையருடன் நட்பாக இருப்போம். ஆனால், அடிமைகளாக ஒரு போதும் இருக்கமாட்டோம்' என்று காந்தி சொன்னதும், 'பிரிட்டிஷ் பிடியிலிருந்து முற்றாக விடுபட முடியும் என்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா?' என்று ஷைரர் கேட்கிறார். 'நான் இறப்பதற்குள் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும்' என்று உறுதிபடக் கூறி மகாத்மா புன்னகை பூக்கிறார். 'சிங்களரும் நாங்களும் ஒன்றில்லை. எங்கள் இனம், மொழி, பண்பாடு, சமயம் அனைத்தும் வேறு. அவர்களோடு நாங்கள் நட்பாக இருப்போம். ஆனால், அடிமைகளாக இருக்க இயலாது' என்று ஈழத் தமிழர் உலகம் முழுவதும் அறவழியில் குரல் கொடுக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அறுபது லட்சம் யூதர்களை விஷவாயுக் குகைகளில் அழித்து, கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து ஹிட்லரை வெல்ல முடிந்த வின்ஸ்டன் சர்ச்சில், அரைநிர்வாணப் பக்கிரி காந்தியிடம் தோற்றுத் தலைகுனிந்ததுதான் வரலாறு.
வரலாற்றிலிருந்து ஈழத்தமிழினம் சில பாடங் களைக் கற்றாக வேண்டும். இந்திய விடுதலையே காந்தி, நேதாஜி, பகத்சிங் மூவரின் லட்சியக் கனவு. துப்பாக்கியை நம்பிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டார்கள். இந்திய தேசிய ராணுவம் அமைத்த நேதாஜி படை நடத்தப் பலர் நிதியை அள்ளிக் கொடுத்தனர். ஜப்பான் துணைக் கரம் நீட்டியது. நேதாஜியின் தியாக மறவர்கள் இந்திய எல்லை வரை வெற்றி கண்டனர். அந்தமானில் சுதந்திரக் கொடியை நேதாஜி பெருமிதத்துடன் பறக்கச் செய்து பரவசப்பட்டார். ஆனால், வெள்ளையரின் வெறிபிடித்த வான்வழித் தாக்குதலில் மணிப்பூர் மண்ணில் மரணம் அவருடைய ராணுவத்தின் வலிமையை முடித்துவிட்டது. நேதாஜியின் இறுதி முடிவு இன்று வரை புதிராகவே போய்விட்டது. பிரபாகரன் விஷயத்தில் வரலாறு மீண்டும் திரும்பிவிட்டது. 'History repeats itself'' என்பது எவ்வளவு பெரிய உண்மை!
புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும், விடுதலைப்புலிகளின் ஆயுத இயக்கம் இனியும் தொடர வேண்டும் என்று ஓயாமல் குரல் கொடுப்பவர்களும் நடந்து முடிந்த நிகழ்வுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. மூன்று லட்சம் தமிழரை வதை முகாம்களில் வைத்திருக்கும் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக சர்வதேச சமுதாயத்தை எப்படித் திருப்புவது? உடைமைகள் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகிவிட்ட தமிழருக்குரிய வாழ்வாதாரங்களை எந்த வகையில் மீட்டளிப்பது? வேகவேகமாக அரங்கேறும் சிங்களர் குடியிருப்புகளை வடக்கிலும் கிழக்கிலும் வளரவிடாமல் தடுத்து நிறுத்த என்ன வழி? உலக நாடுகளின் ஆதரவும், இந்தியாவின் துணையுமின்றி தனிஈழக் கனவை நனவாக்க முடியுமா? நாடு கடந்து நடத்த நினைக்கும் அரசாங்கத்தை (Government in exile) எத்தனை நாடுகள் அங்கீகரித்து ஆதரவு தரும்? இது போன்ற வினாக்களுக்கு விடைகாண வேண்டும்.
நாடு கடந்து உருவாக்க நினைக்கும் தனிஈழ அரசு வீண் முயற்சி;வேண்டாத பண விரயம். சீனாவின் ஆக்கிரமிப்புக்குள்ளான திபெத்திலிருந்து வெளியேறிய பதினான் காவது தலாய்லாமா 1959-ல் இந்தியாவில் தஞ்சமடைந்து, நாடு கடந்த அரசை அமைத்து ஐம்பதாண்டுகளாகியும் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. லட்சக்கணக்கான திபெத்தியர்கள் வேட்டையாடப்பட்ட பின்பும் சீனாவுக்கு எதிராக எந்த உலகநாடும் சினந்து எழவில்லை. தனியாட்சி காண விரும்பிய தலாய்லாமா, 'திபெத் சீனாவின் ஓர் அங்கம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். எங்கள் பண்பாடு, ஆன்மிக வாழ்வு, சுற்றுப் புறச் சூழலுக்குப் பங்கம் இல்லாமல் மாநில சுயாட்சி கொடுத்தாலே போதும்' என்று கையேந்தி நிற்கிறார். சீனாவோ இன்று வரை கருணை காட்டவில்லை. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் 'போலீஸ் வேலை' பார்க்கும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராகச் சிந்திக்கவும் தயாராக இல்லை. வர்த்தகச் சமநிலையை (Balance of Trade) அமெரிக்கா இழக்காமல் இருப்பது இன்று சீனாவின் தயவில் என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும். இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு, அமெரிக்காவின் ஆதரவோடு தனிஈழம் காணும் வாய்ப் பில்லை. உலக நீரோட்டத்துக்கேற்ப நாம் நீச்சல் பழகவேண்டும்.
ஈழத் தமிழினம் இன்று செய்ய வேண்டியது ஒன்றுதான். 'நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. சிங்களரோடு சமமாகவே வாழ விரும்புகிறோம். பாரதம் இனியும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் மறைந்து நிற்கக் கூடாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்து உருவாக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றவேண்டிய தார்மிகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. முதலில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து எங்கள் வரலாற்றுத் தமிழ் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
சிங்களக் குடியிருப்புகளை உடனே அகற்றி, இடம் பெயர்ந்த தமிழர்களைக் குடியேற்ற வேண்டும். தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவம் விரைவாக வெளியேற வேண்டும். இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகளனைத்தும், ஈழத் தமிழ் நிலத்துக்குத் தரப்பட வேண்டும். சிங்களத்துக்குச் சமமாக எங்கள் தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும். வாழ்விழந்த தமிழ்க்குடும்பங்கள் மறுவாழ்வு பெற எல்லா உதவிகளையும் இந்தியா முன்னெடுத்துச் செய்ய வேண்டும்' என்று அமைதியான வழியில் மன்மோகன் சிங்கிடம் முறையிட வேண்டும். உலகம் முழுவதும் அறவழியில் புலம்பெயர்ந்த தமிழர் இடையறாது குரல் கொடுக்க வேண்டும்.
தனிஈழம் என்றால் தயங்குகின்ற தமிழக முதல்வர் கலைஞர், இலங்கையில் கூட்டாட்சி வேண்டி நின்றால், அவருடைய பதவி நாற்காலிக்குப் பங்கம் வராது. தன்னுடைய கூட்டணியில் வெற்றி பெற்ற 28 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஈழத் தமிழரின் பிரதிநிதிகளுடன் சோனியாவையும், பிரதமரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஈழத் தமிழர் நலனில் உண்மையான ஈடுபாடு இருந்தால், எதிரணியிலுள்ள 12 எம்.பி-க்களும் தாமாகவே முன்வந்து, கலைஞர் உருவாக்கும் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழகமும் இந்த முயற்சியில் இறங்க வேண்டும். வி.பி.சிங் அன்று சொன்னதுபோல், தமிழகம் பொங்கட்டும். கலைஞரே அதற்குத் தலைமை ஏற்கட்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரட்டும். இலங்கை அரசை நெறிப்படுத்த இந்தியா முனையட்டும். சிங்கள அரசு திருந்தாவிடில், இந்தியா தன் தீர்ப்பைத் தமிழீழத்துக்கு ஆதரவாக மாற்றி எழுதட்டும்.
எந்த உரிமையும் தமிழருக்குத் தரவிரும்பாத சிங்கள அரசின் பேரினவாதப் போக்கை உலகம் உணரும் நடவடிக்கைகளில் தீவிரமாக நம் தேசம் இன்றே இறங்கட்டும். இவையெல்லாம் இனிதே நடக்க, தமிழகம் காந்தியக் கருவியைக் கைகளில் ஏந்தட்டும்.
'எங்கோ இழைக்கப்படும் அநீதி உலகின் எல்லாப் பகுதிகளிலும் இழைக்கப்படுவதாக உணரவேண்டும்' என்ற மார்ட்டின் லூதர்கிங், 'நண்பர்களே! நம்முடைய தேர்வு வன்முறையா, அகிம்சையா என்பதன்று; அகிம்சையா, அழிவா என்பதுதான்' என்றார். அவர்தான் அடிமைப் போரில் வென்றார். இன்று கறுப்பு மனிதன் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஆட்சி செய்கிறார். காந்தியும், லூதர்கிங்கும் துப்பாக்கி வெடிக்கு இரையானார்கள். அகிம்சை தலைவர்களைத்தான் இழக்கும்; இனத்தை அல்ல!

சித்திரவதை முகாம்களில் சிக்கியுள்ள மூன்று லட்சம் ஈழத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களில் உடனே மீண்டும் குடியமர்த்தக் கோரியும், இரக்கமற்ற போர்க் குற்றவாளிகள் ராஜபக்ச சகோதரர்களைக் கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. இதன் முதற்கட்டமாக நாளை வெள்ளிக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு கோயம்புத்தூர் நகர பேருந்து நிலையம் முன்பாக இக்கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்படுகிறது.

பல்லடம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களிலும் மற்றும் வழியோர கிராமங்கள் அனைத்திலும் தொடராக மூன்று நாட்களுக்கு கையெழுத்து பெறும் பணி நடக்கிறது.

இதனை கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள், கோவை வழக்கறிஞர்கள் மற்றும் மனித நேயத்திற்கான மாணவர் அமைப்பு ஆகியோர் முன்நின்று நடத்துகிறார்கள்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் தொல்காப்பியன், பஞ்சலிங்கம், இளையராஜா, குமார் மற்றும் வழக்கறிஞர்கள் சிவக்குமார், கலையரசன், பிரபாகரன் உட்பட எண்ணற்ற இளைஞர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

இந்த இரண்டு கோரிக்கைகளில் ஐ.நா. சபையை உடனடியாகத் தலையிடக் கோரும் இந்த இயக்கம் அடுத்த வாரத்தில் இருந்து சேலம், மதுரை, சென்னை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருச்சி சட்டக் கல்லூரிகளிலும் நடைபெறவிருக்கிறது.

இது குறித்து சட்டக்கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனித குலத்தின் மீது மாளாத அக்கறை கொண்ட உலகக் குடிமக்களாகிய நாங்கள் தாங்கள் ஏற்கெனவே உணர்ந்த இலங்கையின் இரு விடயங்கள் மீது அழுத்தமான கவனத்தைக் குவித்து உடனடி நடவடிக்கையில் இறங்கக் கோருகின்றோம்.

1. சொந்த நாட்டிற்குள்ளேயே மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு ஹிட்லரது வதை முகாம்களை மிஞ்சுகின்ற வகையில் அமைக்கப்படுள்ள முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். "ஒவ்வொரு வாரமும் மெனிக் பார்ம் முகாமில் குறைந்தது 1,400 தமிழ் மக்கள் சாவைச் சந்திக்கின்றனர்" என்கிறது 'லண்டன் ரைம்ஸ்' பத்திரிக்கை. இக்கூடாரங்களில் சிக்கிக் கொண்டுள்ள மழலைகள் மட்டும் 80,000 பேர். சிறிதளவும் சுகாதாரமற்ற இம்முகாம்களால் அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற துயரங்களால் நாள்தோறும் மரணிக்கும் மழலைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. 180 நாட்களில் அவர்களை மீண்டும் வசித்துவந்த இடங்களில் குடியேற்றுவோம் என முன்னர் அறிவித்த போர்க்குற்றவாளி ராஜபக்ச இப்போது "அதில் பாதிப்பேரைத்தான் குடியேற்றுவோம். இதுவும் எங்கள் இலக்குதானே தவிர உத்திரவாதம் அல்ல." என பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது போரை யார் நடத்தினார்களோ அவர்களே அம்மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பார்கள் என நம்புவது அறிவியலுக்கும், ஆறறிவுக்கும் ஒவ்வாத விடயம். ஆகையால் தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு உடல் உறுப்புக்களை இழந்தும், வீடிழந்தும், சுகாதாரம் இழந்தும், கல்வியை இழந்தும் அபலைகளாய் அல்லற்படும் மக்களை உடனடியாக அவர்களது வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்தி நீதி வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

2. தங்களின் சொந்த நாட்டு மக்களின் மீதே மனித குலம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு முப்படைத் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரை கைது செய்து அனைத்துலக குற்றவியல் வழக்கு மன்றத்தின் முன்பாக நிறுத்தக் கோருகின்றோம். தொடரும் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான கொடூர குற்றங்கள், போர் நியதிகளை மீறி நடத்தப்பட்ட அப்பட்டமான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்காக இவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என வலியுறுத்துகிறோம். நீதியின்பாலும், உலக மேம்பாட்டின் மீதும் அக்கறை கொண்ட தாங்கள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள் என கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

போர் நிறைவு பெற்றுவிட்டால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவே அதிக அக்கறைகள் காண்பிக்கப்படுவதுண்டு. ஆனால் சிறீலங்காவில் நடைபெறுபவை மறுதலையானவை.
இறுதிக்கட்ட கடும் சமரில் 25,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊனமடைந்தும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ளதுடன், ஏறத்தாள மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலகின் ஜனநாயகம் தொடர்பாக கூச்சலிடும் எந்த ஒரு சக்தியும் இந்த மக்கள் தொடர்பாக காத்திரமான ஒரு நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. வன்னியின் 15,000 சதுர கி.மீ பரப்பளவில் வாழ்ந்த மக்கள் இன்று முற்று முழுதாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் தாயகப்பகுதி முற்று முழுதான இராணுவ வலையமாக மாற்றப்பட்டும் வருகின்றது.
விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என வறட்டு கொள்கைகளை முன்வைத்து வந்த இந்திய மத்திய அரசு, தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் மீதான எந்தவொரு மனிதாபிமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை.
மாறாக தமிழ் மக்களின் உரிமைப்போருக்கான அடையாளங்களை முற்றாக துடைத்தழிக்கும் கைங்காரியங்களில் அது ஈடுபட்டுவருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முன்நிறுத்தி அதனை காப்பதற்கு என தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட அது மறைமுகமாக பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது.
அதன் முதற்கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமையை மாற்றுவதற்கு இந்தியா முற்பட்டுள்ளது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்ட இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” அது தொடர்பில் பல மிரட்டல்களை விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது கருத்துக்களுக்கு இணங்காது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் தேசியத்தின் கோட்பாடுகளை சிதைக்கும் மாற்றுக்குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.
அதற்கு தேவையான உறுப்பினர்களை தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் முகாம்களில் இருந்து பலவந்தமாக திரட்டியும் வருகின்றது. விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்ற போதும், விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் எவையும் கடந்த இரு மாதங்களாக இடம்பெறாத போதும் இந்தியாவை பொறுத்தவரையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அரசியல் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகின்றது.
அந்த அரசியல் உறவுகளின் ஊடாக அது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தரப்போவதுமில்லை. அதாவது காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றது என்பது மட்டும் தெளிவானது.
எனவே அதனை எதிர்கொண்டு இந்திய - சிறீலங்கா அரசுகளின் பிடியில் இருந்து ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்கும் சக்தியாக மீண்டும் தமிழினம் போராடவேண்டும் என்பது தான் தற்போது எமக்கு விடப்பட்டுள்ள ஓரே வழி.
போராட்டத்தின் பாதை என்ன? என்பது அல்ல இங்கு உள்ள பிரச்சனை நாம் எவ்வாறு ஒன்றிணைந்து போராடப்போகின்றோம் என்பதே தற்போது எமக்கு முன் உள்ள சவால்கள்.
கால ஓட்டத்தில் எமது மக்களின் வலிகளும் வேதனைகளும் கலைந்து போகும் முன்னர் எமது இனத்தின் விடுதலைக்காக நாம் களத்திலும், புலத்திலும் உள்ள எமது போராட்ட சக்திகளை பலப்படுத்தவேண்டும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

சில படங்களில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பாரே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருக்கிறார்களாம்!

நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன.

கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”.

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியும், அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்ற செய்திதான் அது.

சார்ள்ஸ் அன்ரனி பிணமாக காட்சியளிக்கும் வீடியோ படங்கள், டி.வி. சனல்களில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.

இது சாத்தியமான சம்பவம்தானா? என்று புருவங்களை உயர்த்து முன் அடுத்த கட்டமாக பிரபாகரனே கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

பிரபாகரன் ஒரு அசாதாரணமான மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர். கடந்த 33 ஆண்டுகளாக அவர் நடத்தி வரும் நீண்ட, நெடிய போராட்டத்தில் யார் கண்ணிலும் அகப்படாதவர்.

திட்டங்களை தீட்டி, கன கச்சிதமாக முடிக்கும் இந்த அமைப்பு பற்றி ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது.

தற்போது சார்ள்ஸ் அன்ரனி மரணமடைந்ததாக சொல்லப்படுவதற்கும், பிரபாகரனின் “பிளாஷ் பேக்” கதைக்கும் பின்னணியில் சில “பகீர்” தகவல்கள் ஒழிந்து கிடக்கின்றன.

1986-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து தான் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடந்தது. பிரபாகரன் தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிரபாகரன்- மதிவதனி தம்பதியினர் குடியிருந்தனர். இந்த தம்பதியருக்கு முதலில் பிறந்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.

இதே சமயத்தில் பிரபாகரனின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதில் விசேஷம் என்ன தெரியுமா? அந்த குழந்தைக்கும் சார்ள்ஸ் அன்ரனி என்று பெயர் சூட்டப்பட்டது தான்!

இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்களும் ஒன்றாகவே பிரபாகரன் வீட்டில் வளர்ந்தார்கள். இது பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருப்பதை எப்போதும், யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்று இரு குடும்பத்தினருக்கும் கட்டளையிட்டிருந்தார் பிரபாகரன்.

இருவருமே வளர்ந்து, வாட்ட சாட்டமான வாலிபர்களானார்கள். இருவரும் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு விசேஷமான தாக்குதல் பயிற்சிகளை கற்றனர்.

இதன் பின்னர் லண்டனில் உள்ள மிகப் பிரபலமான கல்லூரி ஒன்றில் விமானம் பற்றிய ஏரோ நாட்டிகல் என்ஜினீயரிங் படப்படிப்பு படித்துள்ளனர்.

இதையடுத்து தனது உறவினர் மகனான சார்ள்ஸ் அன்ரனியை பிரபாகரன் தன்னுடன் இலங்கையில் வைத்துக்கொண்டார். தனது சொந்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் தலைமறைவாக இருக்கச் செய்தார்.

இந்த நிலையில் தான் தன்னுடன் இருந்த சார்ள்ஸ் அன்ரனியை வான்படை தளபதியாக்கி போர்க்களத்தில் குதிக்கச் செய்தார்.

பலவிதமான போர் பயிற்சிகளை பெற்றிருந்த சார்ள்ஸ் அன்ரனி 2 முறை விமானத்தில் பறந்து சென்று கொழும்பு நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவத்தை மிரட்டியவர்.

அந்த சார்ள்ஸ் அன்ரனியைத்தான் இலங்கை இராணுவம் கடந்த மாதம் சுட்டுக்கொன்றது.

அப்படியானால் நிஜமான சார்ள்ஸ் அன்ரனி? அவரது புகைப்படத்தை கூட இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அவர் பத்திரமாக இருக்கிறார் என்கிறது புதிய தகவல்கள்.

அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் பிரபாகரனும், சார்ள்ஸ் அன்ரனியும் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற நவம்பர் மாதம் 27-ந்தேதி விடுதலைப்புலிகளின் வீர வணக்க நாள் அன்று அவர்கள் இருவரும் உலக டி.வி.க்களில் தோன்றுவார்கள் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட இன்னும் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் ஆவேசத்துடன் போருக்கு காத்திருக்கிறார்கள். அவர்களின் புதிய தலைவராக தனது வாரிசு சார்ள்ஸ் அன்ரனியை அன்றைய தினம் பிரபாகரன் அறிவிப்பார் என்கின்றனர்.

தனக்கு வயதாகி விட்டதால் சில முக்கிய பணிகளை மட்டும் தான் மேற்கொள்ளப்போவதாக அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய தலைவர் ஒருவர் அவர்களுக்கு தக்க பாதுகாப்புகளை வழங்கி வருவதாக கூறுகின்றனர்.

ஒரு நீண்ட, நெடிய விடுதலைப்போரில் என்ன வெல்லாம் நடக்கும்? எத்தகைய நெருக்கடி சூழ்நிலைகள் ஏற்படும் என்பது போன்ற விஷயங்களை பிரபாகரன் நன்றாக அறிந்தவர்.எதையும் தீர்க்கமாக அறிந்து செயல்படுபவர்.

எனவே, அவர் விஷயத்தில் “சுட்டுக்கொலை” என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கிற விஷயமல்ல! அவர் இலங்கையில் இல்லாததை தெரிந்து கொண்ட சிங்கள அரசு நடத்திய நாடகம் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உலகமே மிக ஆவலாக காத்திருக்க தொடங்கியிருக்கிறது, வருகிற 27-11-2009 அன்று தொலைக்காட்சிகளை காண!

ஒரு வேளை, அது மீண்டும் தமிழ் ஈழப்போர் ஏற்படும் நாளாகவும் இருக்கலாம்!
1987 ஆண்டு வழங்கிய செவ்வி

1991 இல் வழங்கப்பட்ட செவ்வி

1994 இல் வழங்கப்பட்ட செவ்வி

1995 இல் வழங்கப்பட்ட செவ்வி

இறுதி மாவீரர் உரையின் தொகுப்பு

தமிழன்இல்லாதநாடில்லை. தமிழனுக்கென்றுஓருநாடில்லை

ஈழத்தமிழர்களாகிய நாம் இனவெறி படைத்தவர்கள் அல்ல, போர்வெறி கொண்டவ ன்முறையாளர்களும் அல்ல. நாம் சிங்களமக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்களப்பண்பாட்டைக்கெளரவிக்கின்றோம். சிங்களமக்களின் தேசியவாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்றுத்தாயகத்தில் ஒருதேசியமக்கள் இனம் என்ற அங்கீகாரத்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழவிரும்புகிறோம். "தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம். இரண்டாயிரமாண்டுக்கு முன்பே, உலகத்துக்கு சகோதரத்துவத்தையும், உலக ஒற்றுமையையும் போதித்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக்கூறியவர்கள் தமிழர்கள்.

அமைதியையும், அறிவையும், செல்வத்தையும் மட்டும் நாடி நின்ற ஈழத்தமிழர்கள், தமது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணியில் திகழ்ந்த ஈழத்தமிழர்கள், தனிநாடு வேண்டி ஆயுதமேந்திப்போராடுமளவுக்கு எவ்வாறு உந்த்ப்பட்டார்கள் என்பதற்கானவிடை தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு நன்கு புரியும். தமிழர்களின் மொழிக்கும், தமிழ்மண்ணுக்கும் அவர்களது வாழ்வுநிலைக்கும் இழிவு ஏற்படாதகாலகட்டத்தில் 'யாதும்ஊரேயாவரும்கேளிர்" என்று உலகசகோதரத்துவத்தைப் பேணிய நமது முன்னோர்கள், தமது மொழிக்கு இழிவு ஏற்பட்டு, தமிழ்மண்பறிபோகும் நிலை ஏற்பட்டபோதெல்லாம் தமக்கிடையேயுள்ள பிரிவினைகளை மறந்துஒன்றுபட்டதமிழர்களாக, 'நாமார்க்கும்குடியல்லோம,; நமனைஅஞ்சோம்" எனப்பொங்கியெழத்தவறியதில்லை. தமிழை இழிவுபடுத்தியவட நாட்டவர்களானகனக -விசயன்களைவென்று, அவர்கள் சுமந்தகல்லில் தமிழ்த்தாய்க்குச் சிலையெடுக்கவும், தமிழ்மண்ணைக்காக்க அன்னியர்மேல் படையெடுக்கவும் தயங்கியதில்லை. ஆகவே, தாயிலும் இனிய தமிழ்மொழி 1956 இல் தனிச்சிங்களம் மட்டும் சட்டத்தால் இரண்டாம் நிலைக்குத்தள்ளப்பட்டபோது, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள், திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களால் பறிபோனபோது, தமது சொந்த மண்ணில், தமது மூதாதையர் ஆயிரமாயிரம் ஆண்டு கட்டிக்காத்த ஈழத்தமிழ்மண்ணில், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப்பட்ட போது பொங்கியெழுந்ததில் வியப்பேதுமில்லை!

எமது முன்னோர்கள் தமிழையும், தமிழ்மண்ணையும் காக்கத்தவறியதில்லை அதைத்தான் ஈழத்தமிழர்களும் இன்று செய்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு, அதாவது தமிழீழம் மலரவேண்டும், தமிழீழத்தில் மட்டும்தான்தமிழர்கள்பாதுகாப்புடன், நிம்மதியாக வாழ முடியும் என்ற தமிழீழக்கொள்கைதிடீரென பிரபாகரனின்கனவிலிருந்து உதித்ததோ அல்லது ஈழத்தமிழர்கள் குறுகிய இன, மொழி மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் உருவானததுமல்ல. ஈழத்தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழீழம் மலரப்போராட வேண்டும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்த்தலைவர்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதையும் சனநாயகத்துக்கு அர்ப்பணித்த சனநாயகவாதிகளாவார். ஈழத்தமிழர்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காந்தீய முறையில் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 'ஈழத்துக்காந்தி" எனப்பெயரும் பெற்ற தந்தைசெல்வநாயகம், சிங்களத்தலைவர்களால் பலமுறை ஏமாற்றப்பட்டு, எத்தனையோ இனக்கலவரங்களில் தமிழர்களின் உயிர்களும், உடைமைகளும் பறிபோனதைக்கண்டு, இனிமேல் 'கடவுள் வந்தாலும் தமிழர்களைக் காக்க முடியாது" என நொந்து இலங்கைத்தீவில், எமதுமண்ணில், தமிழர்கள் பாதுகாப்பாக வாழ ஒரேவழி தமிழீழம்மலர்வதுதான் எனத்தீர்மானித்து "உயிரைக் கொடுத்தும் தமிழீழம் அமைப்போம்" என ஈழத்தமிழர்களை அழைத்தார்.



தொடரும்......